விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நிச்சயம்? – வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி நீண்ட வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள். மேலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தும் வருகிறார்கள். ஆனால், இதுவரை இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா

அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘அண்ணாத்த’, ‘லூசிஃபர்’ தெலுங்கு ரீமேக், ‘பாட்டு’, ‘நிழல்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தியும் வருகிறார் நயன்தாரா. இதனிடையே இன்று காலை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் மற்றும் பதிவு வைரலாகி பரவி வருகிறது.

நயன்தாரா கையில் இரண்டு மோதிரம் அணிந்து, விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து “விரலோடு உயிர்கூட கோர்த்து” என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படத்தை வைத்து பலரும் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது எனத் தகவலைப் பரப்பி வருகிறார்கள்.

இது தொடர்பாக விசாரித்த போது, “நீண்ட வருடங்களாக நயன்தாரா கையில் அந்த மோதிரத்தை அணிந்துள்ளார். எப்போதுமே விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். ஆனால், இந்தப் புகைப்படமும், பதிவும் வைரலாகிவிட்டது. இருவருமே பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆகையால் இப்போதைக்கு இருவருக்கும் திருமணம் இல்லை” என்று தெரிவித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே