தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் 4380 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடுவீடாகச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் விற்பது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்களில் நாள்தோறும் 1160 டன் காய்கறிகள், பழங்கள் விற்கவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 2770 வாகனங்களில் 2228 டன் காய்கறிகள் பழங்கள் விற்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தேவையான காய்கறிகள், பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 527 டன் கொள்ளளவுள்ள 194 குளிர்பதனக் கிடங்குகள் உள்ளதாகவும், அவற்றில் மூவாயிரம் டன் விளைபொருட்கள் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 ஆயிரத்து 527 டன் விளைபொருட்களைச் சேமித்து வைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளாட்சித் துறை, கூட்டுறவுத் துறையுடன் இணைந்து காய்கறிகள், பழங்கள் விற்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாள்தோறும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்குக் காய்கறிகள், பழங்கள் விற்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள் விற்பனை குறித்து 044 – 22253884 என்கிற தொலைபேசி எண்ணுக்குப் பேசித் தெரிந்துகொள்ளலாம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே