இலங்கை தாதா அங்கொட லொக்கா தமிழகத்தில் பயன்படுத்திய போலி ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மதுரையில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டான். மேலும் அவனது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்களாக சிவகாமி சுந்தரி வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
இன்றைய சோதனையின் போது, அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த அங்கொட லொக்காவின் போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் பயன்படுத்திய போலி ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி துபாயில் இருந்து சிவகாம சுந்தரிக்கு பணப்பரிமாற்றம் நடந்ததற்கான வங்கி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனிடையே அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான “ரா” பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், கோவையில் சிபிசிஐடி-யிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.