ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த திரிகுதா மலைகளில் உள்ள குகைப் புனித ஸ்தலமான வைஷ்ணோ தேவி ஆலயம் இன்று பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றாக ஜம்மு காஷ்மீரின் திரிகுதா மலைகளில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயமும் இருந்து வருகிறது.
இங்கு ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த குகைப் புனித ஸ்தலமான வைஷ்ணோ தேவி ஆலயத்துக்கு யாத்திரை வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தொங்கப்பட்ட யாத்திரை கடந்த மார்ச் 18 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஷ்மீரில் வைரஸ் பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு வைஷ்ணோதேவி ஆலயம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் தினமும் 2,000 யாத்திரிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் 1,900 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் 100 பேர் வெளி மாநில யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஜம்மு காஷ்மீர் தவித்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் யாத்திரிகர்களின் கொரோனா நெகெட்டிவ் அறிக்கை சோதிக்கப்படும்.
அதே போல் சிகப்பு மண்டலத்திலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு யாத்ரா நுழைவு பகுதியில் ஹெலிபேடில் உடல் சோதனை செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், கருத்தரித்த பெண்கள், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் ஆன்லைன் பதிவு செய்து கொள்ள வேண்டும், எனவும் கோவிலுக்கு வரும் யாத்திரிகர்கள் ஆரோக்கிய சேது ஆப்-ஐ தங்கள் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.