#மத்தியபட்ஜெட்2021 – மம்தா பானர்ஜி விமர்சனம்..!!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களுக்கு விரோதமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரபங்கா உட்சவத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:

”மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.

பாஜகவினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்குச் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள், ஆனால் நடைமுறையில், அவர்கள்தான் நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் விற்கிறார்கள்.

இது ஒரு விவசாயிகளுக்கு எதிரான, மக்கள் விரோத மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் மீண்டும் இங்கு முன்வைக்கிறேன்.

மேலும், பல கோடி ரூபாய்க்காக அசையாத சொத்துகளையே தள்ளுபடி செய்ய முடிகிறதென்றால் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஏன் தயங்குகிறது?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கைவிரித்தது மத்திய அரசு.

ஆனால், தங்கள் கட்சியில் சேரவரும் டிஎம்சி தலைவர்களை விமானம் அனுப்பி வரவழைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? கோவிட் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு நாங்கள் பணம் செலுத்தினோம்.

ஆனால், மத்திய அரசு அவர்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், கட்சி மாறும் தலைவர்களைப் புதுடெல்லிக்கு வரவழைப்பதற்கு மட்டும் அவர்களிடம் பணம் உள்ளது. இது அவர்களின் உண்மையான நிறத்தையே காட்டுகிறது”.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே