முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் மசோதாவில் டிரம்ப் கையொப்பம்! கொந்தளிப்பில் சீனா

சீனா நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்குச் சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளனர். இந்த சட்டம் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உய்குர் மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள். நீண்ட நாள்களாகவே உய்குர் மக்களைச் சீனர்களாகவே மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சீனா. உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாச்சாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாச்சாரத்துக்கு மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக, ரகசிய முகாம்கள், சிறைகள் உள்ளன. இதில் உய்குமார் மக்களை அடைத்து கொடுமை செய்வதாகச் சர்வதேச அமைப்புகள் நீண்ட நாள்களாகவே குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முகாம்கள் மற்றும் சிறைகளில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் அடைபட்டு கிடக்கின்றனர். சீன அரசின் அடக்குமுறைக்கு அடங்காத 10,000 – க்கும் மேற்பட்ட உய்குர் இன மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த முகாம்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், மக்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவுகிறது. உய்குர் மக்கள் குறித்து அமெரிக்கா கருத்து கூறும்போதெல்லாம் சீனா, ‘அமெரிக்கா தங்களது இறையாண்மையில் தலையிடுகிறது’ என்று காட்டமாக பதிலளிக்கும்.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனாவைத் தண்டிக்கும் விதத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டிருக்கிறார்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டத்தின் மூலம், சீனாவில் நடைபெறும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்காவால் தடை விதிக்க முடியும். சீனாவைத் தண்டிக்கும் வகையில் பொருளாதாரத் தடையும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ,’தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளது. டிரம்ப், “இந்த சட்டம் மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களைப் பொறுப்பேற்க வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அமெரிக்கா சீனாவுக்கு வலிமையான செய்தி ஒன்றையும் எச்சரிக்கையையும் விடுத்திருப்பதாகவே சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சட்டம் சீனாவில் நீண்ட நாள்களாகவே துன்பத்தை அனுபவித்து வரும் உய்குர் இன மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது..!

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே