தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.