நாளை முழு முடக்கம்: எந்தெந்த மாவட்டங்களில் மட்டும்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் , பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுவரை 2526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 3ம் தேதிக்கு பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.

அவ்வகையில் கொரோனா தாக்கம் காரணமாக தென்காசி, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடைகள் மூடல், வீட்டை விட்டு வெளியே வரமால் 100% சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். 

அத்தியாவசியமான மருந்து கடைகள், அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும். இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திருவாரூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது முடிவானது.

இதனால், கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கடலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து தஞ்சையிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே