முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்.
ஆண்டுதோறும் ஜூலை 27ஆம் தேதி அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர், இளைஞர்கள், மாணவர்கள் என அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அது போல் இந்த ஆண்டும் இன்றைய தினம் அப்துல் கலாம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கலாமின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார் விஜயகாந்த்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் நீங்கள் உறங்கும் போது வருவது கனவல்ல உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! போன்ற பல பொன்மொழிகளை, எப்போதும் உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும் என்ற கொள்கைகளை, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதித்து, மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து, வழிகாட்டியவர்.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவை போற்றி, கலாம் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றார் விஜயகாந்த்.