உலகெங்கும் இசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், ஒரு வீடியோ மூலமாக அதை தெரிவித்துவிட்டு, மருத்துவ மனையில் அட்மிட் ஆனார்.
தொடக்கத்தில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக நடைபெறும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் திரைத்துறையினர் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள எஸ்.பி.பி ரசிகர்களும் பங்கேற்கிறார்கள்.
அவரவர் இடத்தில் இருந்து விளக்கேற்றி, எஸ்.பி.பி பாடல்களைப் பாடி, அவரது உடல் நலத்திற்காக இயற்கையை வேண்டும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது.
சென்னையில் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இதில் பங்கு பெறுகிறார்கள்.
ரசிகர்கள் பெருமளவில் இதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி. மகன் எஸ்.பி. சரண், இன்று தகவல் தெரிவித்துள்ளதாவது:
எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். என்றாலும் ரசிகர்களின் வேண்டுதல் அவரை மீட்கும்.
திரையுலகினரின் கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலகம் முழுக்க பிரார்த்தனை செய்கிறார்கள்.
நன்றி சொல்ல வார்த்தை இல்லை. தலைவணங்குகிறோம். அப்பாவைக் கடவுள் மீட்டுத் தந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.