தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சிவகங்கை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 1ம் தேதி முதல் கோயம்பேடு பரவலால் சென்னை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று இல்லாத 5 மாவட்டங்கள் :
ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர்.
இதனால், இந்த ஐந்து மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் என மேற்கு மண்டலத்தில் 4 மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை.
இதனால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறி உள்ளது.
வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதோடு, சோதனைச் சாவடிகளை கடக்காமல் குறுக்கு வழியில் மாவட்டத்திற்குள் நுழைபவர்களையும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், கடந்த பத்து நாட்களாக கோவையில் யாருக்கும் புதிய பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், வெளியே வரும் மக்கள் முககவசம் அணிவதோடு, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் வருபவர்களை கண்காணிக்க சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், அறிகுறிகளுடன் வருபவர்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 114 பேரில், 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர்களும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், கடந்த 9 நாட்களாக திருப்பூரில் புதிய தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்தனர்.
இதை தவிர்த்து, நீலகிரி – 3, தர்மபுரி – 4 பேர், புதுக்கோட்டை- 4 பேர், திருவாரூர் – 4 பேர், சேலம் – 5 பேர்,, கன்னியாகுமரி- 9, தூத்துக்குடி -9 பேர், திருப்பத்தூர் 10 பேர் என இந்த 8 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.