பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – கமல்ஹாசன்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம் சாட்டி உள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா பகுதிக்கு சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

பிப்ரவரி 22-ம் தேதி  தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியிடமும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும் நேரில் இந்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகாரளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அளித்த பாலியல் புகாரையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே