உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்துக்கு 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்ராம்பூர் பகுதியில் சாலையோரத்தில் மயங்கியபடி உயிரிழந்த நபரின் உடலை போலிஸார் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து 3 போலீசார் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இறந்தவரின் உடலை அப்புறப்படுத்தும்போது பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அவர்கள் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமது அன்வர் என்பவர், அரசு அலுவலகத்துக்கு சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரது உயிர் பிரிந்துள்ளது.
இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்துள்ளது ஆம்புலன்ஸ்.
ஆனால், கொரோனா அச்சம் காரணமாக ஆம்புலன்ஸ் ஊழியர் இறந்தவரின் உடலை தொடுவதற்கு பயந்துகொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
இதையடுத்து வந்த நகராட்சி ஊழியர்கள் சாலையோரத்தில் கிடந்த முகமது அன்வரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து பால்ராம்பூர் எஸ்.பி கூறுகையில், “இது மனிதநேயமற்ற செயல். உயிரிழந்தவர் குறித்து தகவல் வந்ததும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் அப்புறப்படுத்திய செயல் ஏற்கதக்கது அல்ல. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தெரிவித்தார்.