பெங்களூரு நகரில் இன்று ( மே 20) மதியம் 1.20 மணியளவில் திடீரென இரண்டு முறை பயங்கர சத்தம் கேட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த சத்தம் கேட்டது.
அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என நினைத்தோம் எனக்கூறினர்.
இன்னும் சிலர் பூம் என்ற சத்தம் கேட்டதாகவும், இன்னும் சிலர் பெரிய இடி போல சத்தம் கேட்டது என தெரிவித்தனர்.
சிலர், விமானத்தின் அதிவேக ஓட்டத்தின் போது கூட இப்படி சத்தம் கேட்கும் என்றனர்.
இது தொடர்பாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ”Bengaluru” என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட அது முதலிடம் பிடித்தது.
இந்த சத்தம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
விமானம் ஏதும் பறந்து சென்றதா என்பதை உறுதி செய்யும்படி விமானப்படை கட்டுப்பாட்டு அறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில நொடிகள் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் ஆடின. ஆனால், சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கர்நாடக தேசிய பேரிடர் கண்காணிப்பு மைய தலைவர் சீனிவாச ரெட்டி கூறுகையில், பெங்களூருவில் பூகம்பம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற பலத்த சத்தம் கேட்கும் என்றார்.
இந்த சத்தம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.வளி மண்டலத்தில் அதிவேக விமானங்கள் போகும்போது ஏற்படும் அதிர்வுகள் குவிந்து இதுபோன்று சத்தம் வரலாம் என்று சில வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.