ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை நிர்வகிக்க அரச குடும்பத்திற்கு உரிமை உள்ளது : சுப்ரீம் கோர்ட்

புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் உரிமைகளை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். 18-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் மன்னர் குடும்பத்தினரின் குலதெய்வமாகக் கருதப்படுவதால் அந்த கோயில் நிர்வாகத்தை கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்குப்பின்பும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வசமே இருந்தது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏரளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், 2011-ம் ஆண்டு, ஜனவரி 31-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ கோயில் நிர்வாகத்தையும், சொத்துக்கள் நிர்வாகத்தையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். கோயில் நிர்வாகத்தை கவனிக்க அரசு சார்பில் குழு அமைத்து நிர்வகிக்கலாம். கோயிலின் பூஜை , விழாக்கள் போன்றவை வழக்கம்போல், பாரம்பரிய முறைப்படியே நடத்த வேண்டும் அதில் மாற்றம் செய்யக்கூடாது” என உத்தரவிட்டது

இந்த உத்தரவுக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 2011-ம் ஆண்டு, மே 2-ம் தேதி கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், கோயிலின் அனைத்து சொத்துக்கள், நகைகள், விலைமதிக்க முடியாத பொருட்கள், கோயிலில் இருக்கும் பாதாள அறைகளைத் திறந்து நகைகளை மதிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த பணிக்கு உதவுதவற்காக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அவரின் மேற்பார்வையில் இதுவரை ஏ முதல் எப் வரை 5 பாதாள அறைகள் திறந்து மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் பல லட்சம் கோடிக்கும் அதிகமான, விலை மதிக்கமுடியாத ஏராளமான தங்கம், வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நகைகள் குறித்த மதிப்பீட்டையும் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

இதில் கோயில் நிலவறையி்ல் உள்ள பி பாதள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தததால், அந்த அறை திறக்கப்படவில்லை.

அந்த அறையை மறு உத்தரவு வரும்வரை திறக்கக்கூடாது என்று கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மேலும், கோயிலை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது.

அதன்படி, 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்தது. தணிக்கையை முடித்து, ஆயிரம் பக்க அறிக்கையை, 5 பகுதிகளாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் சாரம்சமாக ரூ.186 கோடி மதிப்புள்ள கோயில் நகைகள் மாயமாகி இருப்பதாகவும், கோயிலை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே