சச்சின் பைலட் பாஜகவில் சேர மாட்டார் – உதவியாளர் தகவல்

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதே முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியையும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது. அப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும், இருவரும் தாமரை இலைமேல் தண்ணீர் போல ஒட்டாமலேயே இருந்து வந்தனர்.

தற்போது அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரம் சச்சின் பைலட்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில் சச்சின் பைலட் தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், இன்று நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அரசில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி இருக்கும் சச்சின் பைலட்டை சோனியா காந்தி ராகுல்காந்தி இதுவரை சந்திக்கவில்லை. ஜோதிராதித்யா சிந்தியாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட்டும் வெளியேறலாம் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாக இதனை கூறப்பட்டது. சச்சின் பைலட் இன்று திங்கள்கிழமை பாஜக தலைவர் ஜேபி நாடாவை சந்திக்க வாய்ப்புள்ளது அவர் பா.ஜனதாவில் சேருவார் என்றும் கூறப்பட்டது.

சச்சின் பைலட் பாஜகவில் சேரப்போவது இல்லை. அப்படி எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று அவரின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்தார்.

முதல்வருக்கும் அவரது துணை முதல்வருக்கும் இடையிலான மோதலை தடுக்க காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு விரைந்து உள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே