குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி.,க்கு எதிராக டில்லியின் ஷாகீன்பாக் பகுதியில் 70 நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், ஜாப்ராபாத் பகுதியிலும், 1000 பெண்கள் மற்றும் 500 ஆண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அங்கு சிஏஏ.,வுக்கு எதிராக கோஷம் போட்டனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், மெட்ரோ ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
இன்று காலை அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், டில்லியின் சந்த்பாக் பகுதியிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வஜீரியபாத் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
டில்லியின் ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த 70 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழுவினர் இன்று மாலை அவர்களை சந்திக்க உள்ளனர்.
இதனிடையே அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஷாகீன்பாக் பகுதியில் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது.
ஷாகீன் பாக் பகுதியை சுற்றி 5 இடங்களில் போலீசார் அடைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது.