ஷூட்டிங்கிற்கு லேட்டா வந்த சூப்பர் ஸ்டாரை கையில் கல்லுடன் துரத்திய இயக்குநர்.

ஷூட்டிங்கிற்கு தாமதாக வந்த ஷாருக்கானை இயக்குநர் ராஜ் கபூர் கல்லை எடுத்துக் கொண்டு துரத்திய சம்பவம் குறித்து தற்போது பேசப்படுகிறது.
பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர். கர்னல் ராஜ் கபூரின் ஃபவ்ஜி இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் தான் ஷாருக்கான் நடிகர் ஆனார். சின்னத்திரையில் இருந்து வந்தும் பெரிய திரையில் பெரிய ஆளாக முடியும் என்பதை நிரூபித்தார் ஷாருக்கான்.
அவரை பார்த்து பாலிவுட்டில் சாதிக்க ஆசைப்பட்டு நடிக்க வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்துக்கு ஷாருக்கான் என்றால் உயிர். பாலிவுட்டின் அடுத்த ஷாருக்கானாக ஆசைப்பட்டார் சுஷாந்த் சிங் ராஜ்புட். சுஷாந்த் தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தது ஷாருக்கானுக்கும் தெரியும். அதனால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த ஷாருக்கான் அதிர்ந்து போய்விட்டார்.

சுஷாந்தும் ஷாருக்கானை போன்று சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தன் கடின உழைப்பால் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றார்.

இந்நிலையில் ஷாருக்கானுக்கு முதன் முதலாக வாய்ப்பளித்த மறைந்த கர்னல் ராஜ் கபூர் முன்பு அளித்த பேட்டி ஒன்று குறித்து தற்போது பேசப்படுகிறது. அந்த பேட்டியில் ஷாருக்கான் பற்றி ராஜ் கபூர் கூறியிருந்ததாவது,

ஃபவ்ஜி தொடரில் கமாண்டோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆள் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஷாருக்கான் வாய்ப்பு கேட்டு என் அலுவலகத்திற்கு வந்தார். கமாண்டோ கதாபாத்திரத்தை தனக்கு அளிக்குமாறு ஷாருக்கான் கூறினார். நான் கமாண்டோவாக சிறப்பாக நடிப்பேன் என்று ஷாருக்கான் வாக்குறுதி அளித்தார்.
ஷாருக்கானை அனைவரும் விரும்பினார்கள். அந்த தொடரின் ஹீரோ ஷாருக் இல்லை என்றாலும் அனைவரின் கவனத்தையும் அவர் தான் ஈர்த்தார். ஷாருக்கான் எப்பொழுதுமே ஷூட்டிங்கு தாமதாக தான் வருவார். ஒரு நாள் கல்லை எடுத்துக் கொண்டு அவரை துரத்தினேன். அதில் இருந்து ஷூட்டிங்கு சரியான நேரத்திற்கு வந்து நடித்தார்.
கமாண்டோவாக நடிக்க தேர்வானவர்களை எல்லாம் ஓடச் சொன்னேன். அதில் பாதி பேர் அப்படியே சென்றுவிட்டனர். ஷாருக்கான் திரும்பி வந்ததை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது என்றார்.
ஷாருக்கான் படப்பிடிப்புகளுக்கு தற்போதும் தாமதமாக வருவதாக பேச்சு உள்ளது. ஷாருக்கானின் நெருங்கிய தோழியான இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் கூட அவரை கிண்டல் செய்திருக்கிறார். ஃபரா கான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார்.

ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் ஒரு நடிகராக நடித்திருந்தார். அதில் அவர் படப்பிடிப்புக்கு பல மணிநேரம் தாமதமாக வருவது போன்று காட்சிகள் வைத்திருந்தார் ஃபரா கான். தன் நண்பன் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராததை ஃபராவே கிண்டல் செய்து காட்சி வைத்தது அனைவரையும் வியக்க வைத்தது.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஷாருக்கான் வீட்டில் முடங்கியிருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜீரோ படம் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு ஷாருக்கான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானியின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷாருக்.

ஹிட் படங்களை கொடுப்பதற்கு பெயர் போனவர் ராஜ்குமார் ஹிரானி. அதனால் அவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவிருக்கும் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது. ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே