அரசின் சிறப்பு நிதி ஊக்க தொகுப்பு திட்டம், உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறத் தவறியதை அடுத்து, பங்குச் சந்தைகள் நேற்று கடுமையான சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’, 1609 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை குறைவால், வங்கி மற்றும் வாகன துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டன.
இதனையடுத்து, சந்தையில் சரிவு ஏற்பட்டது.
சென்செக்ஸ் நேற்று, 1608.75 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 30028.98 புள்ளிகளில் நிலைபெற்றது.
இது, 3.44 சதவீத சரிவாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டி, 313.60 புள்ளிகள் சரிந்து, 8823.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
இது, 3.43 சதவீத சரிவாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் மிக அதிக இழப்பை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் விலை, 10 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
இதனையடுத்து, எச்.டி.எப்.சி., மாருதி சுசூகி, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ரா சிமென்ட் ஆகிய நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
மாறாக, டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐடிசி., எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவன பங்குகள் விலையேற்றத்தை கண்டன.
கொரோனாவை சமாளிப்பதற்காக, ஊரடங்கை இம்மாதம், 31ம் தேதி வரை நீட்டித்ததை அடுத்து முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் சோர்வடைந்தனர்.
மேலும், அரசின் நிதி நடவடிக்கைகள் அவர்களது நம்பிக்கையை பெறத் தவறியதால், சந்தை இறங்கி வருகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.