வேறு வழியின்றி 7.5% ஒதுக்கீடு-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி..!!

7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால அவகாசம் கோரி வந்தார்.

இதையடுத்து, கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற நோக்கில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தார்.

இதன் தொடர்ச்சியாக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% இடஒதுக்கீடு-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!

திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.

இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே