இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகள் திரும்பிச் செல்ல முடியாது – ராணுவத் தளபதி நரவனே

எல்லை கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்முவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, நக்ரோட்டா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆப்பிள் ஏற்றிச் சென்ற லாரியை சோதனையிட முயன்றபோது, அதில் பதுங்கியிருந்த நான்கு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

லாரி ஓட்டுநர் கீழே இறங்கி தப்பியோடி நிலையில், வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் லாரியை வெடிக்க வைத்தனர்.

சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில், நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தியாவுக்குள் ஊடுருவிய அந்த நான்கு பயங்கரவாதிகளும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ தளபதி நராவனே, பாதுகாப்புப் படையினர் திறம்பட பயங்கரவாதிகளை அழித்துள்ளனர் என்றும்; வீரர்களின் துணிச்சலுக்கும், வீரத்துக்கும் இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக் காட்டு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகள், மீண்டும் உயிருடன் திரும்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம் என்றும் நராவனே தெரிித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே