தெலங்கானா : எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு..!!

செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தீ அதற்கு மேலே அமைந்துள்ள ஹோட்டலுக்கு பரவியதில் எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஷோரூம் முழுவதும் தீ பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த தீயானது வேகமாக பரவி ஷோரூமிற்கு மேலே அமைந்துள்ள ரூபி ஹோட்டலிலும் பற்றியுள்ளது. அப்போது அந்த ஹோட்டலில் 25 பேர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஹோட்டலுக்கு பரவிய தீயினால் ஹோட்டல் அறைக்குள் இருந்தவர்களில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ஷோரூமில் இருந்து வந்த புகை மூட்டத்தால், ஹோட்டல் ஷோரூமில் தங்கியிருந்த பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளனர். அதில் மேலும் சிலர் தீயிலிருந்து தப்பிப்பதற்காக மாடியிலிந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 5 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைத்து பின்பு காயமடைந்தவர்களை உடனடியாக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீ விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், தீயணைப்பு துறை இயக்குனர் சஞ்சய் குமார் ஜெயின் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு, சென்று மீட்பு பணிகளை துரிதப்படுததினர். இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்று கூறிய ஸ்ரீனிவாஸ் யாதவ், தீக்காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல், விடுதியில் தங்கியிருப்பவர்கள் வேலைக்காக வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் என்று கூறிய அமைச்சர், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் வெடித்து சிதறியதில் தீ விபத்தானது நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே