சென்னையில் நாளை டாஸ்மாக் திறப்பதை பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைககளை கடந்த மே 7ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் நாளை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” என பதிவித்துள்ளார்.