ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நேராக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் இந்திய வீரர்கள். ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

இந்நிலையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று டெஸ்டுகளில் இடம்பெற மாட்டார். அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி விடுவார்.

காயம் மற்றும் ஓய்வு காரணமாக ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா தேர்வாகியுள்ளார்.

இந்திய ஒருநாள் அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சை பெற்று வருகிறார் இஷாந்த் சர்மா. முழுமையான உடற்தகுதியை அடைந்த பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இணைத்துக்கொள்ளப்படுவார்.

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார். இதனால் டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நிலைமை குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

கமலேஷ் நாகர்கோட்டி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லமாட்டார். மருத்துவக் குழுவினர் அவரைக் கண்காணித்து வருகிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே