சுஷாந்த் சிங் ராஜ்புட்டிற்கு சொந்த ஊரில் கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டி அவரை பெருமை படுத்தி உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதாகும் அவர் திடீரென இந்த அதிர்ச்சி முடிவு எடுத்தது பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அவர் மனவருத்தத்தில் இருந்தார் என்று கூறப்படும் நிலையில் அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இயக்குனர் சேகர் கபூர் இடம் இது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு அவர் ஈமெயிலில் பதிலளித்துள்ளார். மேலும் இன்று சல்மான் கானின் மேனேஜர் ரேஷ்மா செட்டி இடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது சுஷாந்த் சொந்த மாநிலமான பிகாரில் அவருக்கு ஒரு பெரிய கௌரவம் வழங்கப்பட்டு உள்ளது.

சுஷாந்த் சிங்கின் சொந்த ஊரான பூர்னியா என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்தின் மேயர் சவிதா தேவி இது பற்றி பேசும் போது ‘சுஷாந்த் ஒரு சிறந்த கலைஞர், இப்படி ஒரு சாலை அவரது பெயர் சூட்டுவதன் மூலம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதாக இருக்கும் என அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபானி முதல் மாட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஃபோர்டு நிறுவனத்தின் ரவுண்டானா தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் சவுக் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

சமீபத்தில் அவர் இந்த பெயர்கள் கொண்ட போர்டை திறந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆகியுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் சவிதா தேவி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வேண்டுகோளுடன் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். அதற்குப் பிறகு அந்த புகழை கொண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த Chhichhore என்ற படமும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
சினிமா துறையில் அதிக அளவில் அவருக்கு அழுத்தம் இருந்தது எனவும், அவர் ஒப்பந்தமான பல படங்களிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அவரது தற்கொலைக்குப் பிறகு பாலிவுட் சினிமாவில் வாரிசு கலாச்சாரம் மிக அதிகளவில் இருப்பதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். அது தொடர்பான விவாதம் தற்போது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் கரண் ஜோகர் மற்றும் ஆலியா பட், சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பல வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகளை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தாக்கி பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே