நீண்ட இடைவெளிக்குப் பின் ‘சூர்யவன்ஷி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூர்யவன்ஷி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து ‘சூர்யவன்ஷி’ படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் ‘சிங்கம்’ அஜய் தேவ்கன் மற்றும் ‘சிம்பா’ ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராதக் காரணத்தால், ‘சூர்யவன்ஷி’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் ‘சூர்யவன்ஷி’ வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள். இன்று (மார்ச் 14) இயக்குநர் ரோஹித் ஷெட்டி பிறந்த நாளை முன்னிட்டு ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். ‘சூர்யவன்ஷி’ படத்தை கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே