சுரேஷ் சங்கையா – செந்தில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. இதில் ‘சத்திய சோதனை’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து செந்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தையும் ‘சத்திய சோதனை’ படத்தின் தயாரிப்பாளர் சமீர் பரத்ராம் தயாரிக்க முன்வந்தார்.

பிப்ரவரி 1-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. இதில் ஆயுள் தண்டனை முடிந்து கிராமத்துக்கு வரும் நபராக செந்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் செந்திலுடன் நிறையப் புதுமுகங்களை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார் செந்தில். தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே