‘சுல்தான்’ வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இல்லை: படக்குழுவினர் தகவல்

சுல்தான்’ வெளியீட்டுத் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை யாருக்குக் கொடுக்காமல், தமிழகத்தில் நேரடியாக வெளியிட ட்ரீம் வாரியர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கார்த்தியின் முந்தைய படங்களை விட, அதிகமான திரையரங்குகளில் ‘சுல்தான்’ வெளியாகும் எனத் தெரிகிறது.

ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்வைத்து மார்ச் 26-ம் தேதி வெளியாகவிருந்த ‘டாக்டர்’ திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ‘சுல்தான்’ படமும் ஒத்திவைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்ட போது, “‘சுல்தான்’ வெளியீட்டில் கண்டிப்பாக மாற்றம் இல்லை. திட்டமிட்டபடி வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ‘சுல்தான்’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே