மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் கட்டணம் – ஜியோ அறிவிப்பு

செல்போன் அழைப்புகள் இனிமேல் இலவசம் இல்லை என்றும், நிமிடத்திற்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இதுவரை ஜியோ வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைப்படி, இதர செல்போன் நிறுவனங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் இடைத்தொடர்பு கட்டணம் வழங்க வேண்டும் என்றும், இந்த வகையில் ஐடியா, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜியோ 13,500 கோடி ரூபாயை கட்டணமாக வழங்கி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் செல்போன் இணைப்பில் இருந்து மற்றொரு செல்போன் இணைப்பை தொடர்பு கொள்ளும் போது வசூலிக்கப்படும் கட்டணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வரும் என்று முன்னர் கூறிய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இப்போது, கட்டண முறை நீட்டிக்கப்படும் என்று கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், நிமிடத்திற்கு 6 காசுகள் என்ற வீதத்தில் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இன்று முதல் ரீசார்ஜ் செய்யும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ எண்ணில் இருந்து மற்றொரு ஜியோ எண்ணை தொடர்பு கொண்டால் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக டேட்டா வழங்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்களின் இழப்பு ஈடுகட்டப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே