மின்இணைப்பு வழங்கும்போது கட்டிட விதிகளை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

மின் இணைப்பு வழங்கும்போது தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டுமென தமிழக மின் பகிர்மானக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி கட்டிடப் பணிகள் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், அவற்றிற்கு மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றம் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கட்டிடப் பணி முடிப்புச் சான்றிதழைக் கட்டாயமாக்கி 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை உருவாக்கி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை பிறப்பித்தது.

அதைப் பின்பற்றி, புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிடப் பணி முடிப்புச் சான்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் உத்தரவு பிறப்பித்து சில மாதங்களே ஆன நிலையில், அதைத் திரும்பப் பெறுவதாக டான்ஜெட்கோவின் விநியோக இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திரும்பப் பெற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டான்ஜெட்கோ தரப்பில், குறைந்த மின்னழுத்தத்தைப் பயன்படுத்தும் சிறிய கடைகள் மற்றும் ஒரு குடியிருப்பில் இருக்கின்ற சிறிய பகுதி ஆகியவற்றிற்கு மட்டுமே பணி முடிப்புச் சான்றைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும்; ஆனால், சொத்து வரி சான்றைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை உள்ளாட்சி அமைப்புகள், சீல் வைத்த உடனேயே அந்தக் கட்டுமானத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், மின் இணைப்பு வழங்கும்போது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றும்படி டான்ஜெட்கோவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே