கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு தமிழக அரசு சார்பில் சிலை – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயோதிகம் காரணமாக 99-வது வயதில் நேற்றிரவு மறைந்தார். அவரது மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.), ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

மறைந்த எழுத்தாளர் கி.ரா. படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினைப் போற்றும் வகையிலும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை, மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்.

கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே