இலங்கை தாதா அங்கொட லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது அம்பலம்..!!

இலங்கை தாதா அங்கொட லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமானது. கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடி தெரிவித்துள்ளனர்.

இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடலை போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி மதுரையில் தகனம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் பயன்படுத்திய போலி ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மதுரையில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், அங்கொடா லொக்கா துபாய் தப்பி செல்வதற்கும், ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போலி ஆவணங்கள் தயாரிக்க மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும், போலி ஆவணங்களாக இருந்தாலும் உண்மையான முகவரியை பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா என்ற லசந்த பெரேரா, கோவையில் காதலியால் கொலை செய்யப்பட்டான். மேலும் அவனது உடல் மதுரையில் எரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்களாக சிவகாமி சுந்தரி வீட்டில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே