முதல் முறையாக தமிழகத்தில் இருந்து புதுவைக்கு மது கடத்தல்

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்கள் கடத்திய 6 பேரை  போலீசார்  கைது செய்துள்ளனர். 

புதுச்சேரியில் கொரோனா நோயால் இருவர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அருகில் உள்ள தமிழக மாவட்டங்களான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நோய் தொற்று அதிகமாக இருக்கிறது.

இதனால் புதுச்சேரியின் எல்லைகள் கடந்த 40 நாட்களாக சீல் வைக்கப்பட்டுள்ளன.

அதில் கடந்த 4 நாட்களாய் அண்டை மாநிலத்தவரை புதுச்சேரிக்குள் போலீசார் மிக அவசியமான காரணம் தவிர வேறு எதற்கும் அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் இரண்டு நாட்களுக்கு திறக்கப்பட்டன.

இதனால் புதுச்சேரியின் குடிபிரியர்கள் குறுக்குவழியில் கடலூர், விழுப்புரம் சென்று மதுபானங்களை வாங்கி வந்தனர்.

புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்படாததால் தமிழக சரக்குக்கு புதுச்சேரியில் அதிக டிமாண்ட் ஏற்பட்டது.

இதனை சாதகமாக்கிய உழவர்கரை உமர், ஒதியம்பட்டு முருகன், கண்டமங்கலம் நாகராஜ், திருக்கனூர் செந்தில்குமார் ஆகியோர் மீது இரு சக்கர வாகனங்களில் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்தனர்.அவற்றை புதுச்சேரியில்  கூடுதல் விலைக்கு விற்க திட்டம் போட்டு வந்த இவர்களை புதுச்சேரி-விழுப்புரம் எல்லையில் சோதனையில் ஈடுபட்ட  திருக்கனூர் போலீசார் கைது செய்தனர். மதுகடத்தல்,ஊரடங்கை மீறுதல்,நோய் பரப்புதல் உட்பட 4 பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  இரு சக்கர வாகனங்கள் மற்றும் 23 கால் பாட்டில்,6 அரை பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதே போல் நேற்று முன்தினம் தமிழகத்தில் முதல் நாள் மதுக்கடைகள் திறந்த போது செல்லிப்பட்டு சரவணன்,மணவெளி ரமேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் கடார் பகுதிக்கு  சென்று மது வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்க முயன்ற போது 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கமாக புதுச்சேரியில் இருந்து தான் தமிழக பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்படும்.

ஊரடங்கால் மூடப்பட்ட மதுபான கடைகள்  புதுச்சேரியில் இன்னும் திறக்கப்படவில்லை.

ஆனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு திறக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்கள் தாராளமாக வந்தன.

அப்படி கொண்டு வரப்பட்ட போது ஒருசிலர் மட்டுமே சிக்கினார்கள். இச்சம்பவத்தை”தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மது கடத்துவது உலக வரலாற்றில்  இதுவே முதல்முறை” என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே