பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மொழிகளை கடந்து பல லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை அமைந்த கரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி உடல்நிலை மோசம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக கடந்த 7ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.
எஸ்பிபி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதோடு, மகன் எஸ்பிபி சரணுடன் இணைந்து கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்ப்பதாகவும், பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்று எஸ்பிபி உடலநிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
கோமா நிலையில், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எஸ்பிபி சரண், மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.