சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி. குடும்பத்தினர் வருகை..!!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சிலநாள்களுக்கு முன்பு, எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது: எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடர்ந்து சீரான முன்னேற்றத்தில் உள்ளது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது.

திரவ உணவுகளை உட்கொள்கிறார். விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்றார்.

எனினும் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் குணமாக வேண்டும் என்று பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்கள்.

எஸ்.பி.பி. மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே