உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்: சசிகலா வேண்டுகோள்!

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர்த்துவி மரியாதை செலுத்தினார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த சசிகலா, முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தமிழக மக்கள், உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்ததாகவும், அதற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

ஜெயலலிதா தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதை மனதில் நிறுத்தி உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், அதில் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறினார். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன், நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறிய சசிகலா, விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்றும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே