பருவம் மாறும் போது சரும பராமரிப்பையும் மாத்துங்க! முதல்ல இந்த 4 விஷயம் பண்ணா போதும்!

கோடைக்காலம் முடிந்து வரும் இந்த நேரத்தில் சரும அழகை விரும்புகிறவர்கள் பராமரிக்கும் முறையையும் மாற்ற வேண்டும். வெயில் காலத்தில் சருமம் அடையும் வறட்சி ஒரு புறம் என்றால், மழைக்காலங்களில் வேறுவிதமான வறட்சியை சருமம் சந்திக்கும். அவை உதடுகளிலும் பாதங்களிலும் கூட பாதிப்பை உண்டாக்கும். வெகு சிலருக்கு சருமம் முழுக்கவே சொரசொரப்பு கொடுக்கும். ஆரோக்கியம் இல்லாத சருமத்தை உண்டாக்கும் இக்காலங்களில் நம் பராமரிப்பு முறையை மாற்றினாலே போதுமானது. அப்படி என்ன செய்ய வேண்டும் பார்க்கலாமா?
​குளியலுக்கு முன்பு
சுத்தமான தேங்காயெண்ணெயை சருமம் முழுக்க தடவுங்கள். தேங்காயெண்ணெயில் இருக்கும் ஆன் டி ஆக்சிடண்ட் பருவ மாற்றத்தில் சருமத்தில் கிருமிகள் படர்வதையும், சேர்வதையும் தடுக்கும். சுத்தமான தேங்காயெண்ணெய் தயாரிப்பு குறித்து முன்னரே கொடுத்திருக்கிறோமோ. தேங்காய்ப்பாலை காய்ச்சினாலே சுத்தமான தேங்காயெண்ணெய் கிடைக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காயெண்ணெயை உடல் முழுக்க தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நறுமணம் மிக்க அடர்த்தியான கலரை கொண்ட சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். இது எல்லா காலங்களிலும் சருமத்துக்கு நல்லதல்ல என்றாலும் இப்போது நிச்சயம் தவிர்க்க வேண்டும். சுத்தமான தேங்காயெண்ணெய் சருமத்தை மென்மையாக மிருதுவாக வைத்திருக்க உதவும்.

​குளியல் பொடி பேக்
முகத்துக்கு ஃபேஸ் பேக் பயன்படுத்துவதை தவிர்த்து முகத்துக்கு மூலிகை பேக் பயன்படுத்தலாம். குளியல் பொடி குறித்தும் அதில் சேர்க்கவேண்டிய பொருள்கள் குறித்தும் முன்பே கூறியிருக்கிறோம். அந்த பொடியை பயன்படுத்தினாலே போதுமானது. அல்லது ரோஜா பொடி, நெல்லிப்பொடி, அதிமதுரப்பொடி, மஞ்சள் தூள், வேப்பிலை பொடி, அனைத்தையும் சம அளவு கலந்து பன்னீரில் குழைத்து முகத்துக்கும் கழுத்துக்கும் தடவவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச் என்று இருக்கும்.

சருமம் வறட்சியாக இருந்தாலும், எண்ணெய்பசையாக இருந்தாலும், நார்மல் ஸ்கின் ஆக இருந்தாலும் அனைவருக்கும் இது பொருந்தும். முகத்தில் இந்த பேஸ்ட் பயன்படுத்துவதற்கு முன்பு துளி எண்ணெயை முகத்தில் தடவி கொள்ளுங்கள். மற்ற பேக்குகள் எண்ணெய் சருமத்தில் ஒட்டாது. ஆனால் இவை நன்றாகவே ஒட்டிகொள்ளும். அதோடு ஆண்கள் இந்த பேக் பயன்படுத்துவதாக இருந்தால் மஞ்சளை மட்டும் தவிர்க்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை அல்லது ஒருமுறை செய்தாலே போதுமானது.

​ஃபேஷியலும் அவசியம்
முகத்துக்கு தான் பேக் போடுகிறோமோ அதனால் ஃபேஷியல் போட வேண்டாம் என்று நினைப்பதும் தவறு. சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதும் அவசியம். அப்படி செய்தால் தான் முகத்தில் பருக்கள் வராமல் இருக்கும். அப்படி செய்யகூடிய ஃபேஷியலுக்கு பயன்படுத்து பொருள்கள் பலவும் நம் வீட்டிலேயே உண்டு. ஆனால் தற்போதுள்ள வானிலை மாற்றத்துக்கு சிறந்தது பழ ஃபேஷியல் . அதிலும் சில பழங்கள் உடலை குளிர்விக்க செய்யும் என்றாலும் பப்பாளி சிறந்த தீர்வாக இருக்கும்.

பப்பாளி பழத்தை மிக்ஸியில் மசித்து முகம், கழுத்து பகுதியில் தடவி வந்தாலே நல்ல மாற்றம் கிடைக்கும். இந்த நேரத்தில் இதைவிட சிறந்த ஃபேஷியலுக்கு உதவும் பழம் வேறு எதுவும் இல்லை. அதே நேரம் முகத்தில் தளர்வு இருந்தால் நீங்கள் பாசிப்பயறு மாவு அல்லது கடலை மாவு சேர்த்து முகத்தில் பேக் போட்டால் முகத்தில் தளர்ச்சி இருக்காது. அதே போன்று எந்த காரணத்தையும் கொண்டு முல்தானிமெட்டியை தற்போது பயன்படுத்திவிட வேண்டாம்.

​பாதப்பராமரிப்பு மிகவும் அவசியம்
பாதங்களில் வெடிப்பு, சேற்றுப்புண் பிரச்சனைகள் எல்லாமே வருவதுண்டு. ஆனால் இவை பருவமாற்றத்தில் சற்று கூடுதலாக இருக்கும். வெறும் தரையில் நடக்கும் போது கூட ஈரப்பதமிக்க கிருமிகளால் பாதத்தில் உண்டாகும் பாதிப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால் பாத பராமரிப்பு பொறுத்தவரை தினசரி செய்ய வேண்டும்.
வெளியில் இருந்து வந்தாலும், வீட்டில் இருந்தாலும் தினமும் இரவு பாதத்துக்கு மசாஜ் செய்வதை தவறக்கூடாது. தூங்கும் முன்பு பாதத்தை வெந்நீரில் கழுவி சுத்தமாக துடைத்து உலர்ந்ததும் உரிய மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் குறைந்தது சுத்தமான தேங்காயெண்ணெயை பயன்படுத்தினாலும் கூட போதும்.

மழைக்காலம் துவங்கும் நேரத்தில் முதலில் தவிர்க்காமல் இதை கடைபிடியுங்கள். தொடர்ந்து இது குறித்து தனித்தனியாக விரிவாக பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே