முதல்வர் பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப்பெற்று விடுதலையான சசிகலா, பிப்.,8ம் தேதி தமிழகம் வந்தார்.
இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலா வருகைக்கு திடீரென ஒரு மாயை ஏற்படுத்தி கூட்டம் கூடுவது போல் ‘பில்டப்’ தர வேண்டாம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுவது காலத்திற்கும் நிற்காது. உட்கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளையே அண்ணன் – தம்பி பிரச்னை என அமைச்சர் வேலுமணி கூறினார்.
அதிமுக.,வுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கும். சசிகலா, தினகரன் ஆகியோர் ஒன்றிணைவோம் என திமுக.,விற்கு தான் அழைப்பு விடுக்கின்றனர்.
அவர்களுக்கு அதிமுக தான் பொது எதிரி. ஆனால் எங்களுக்கு திமுக தான் பொது எதிரி.
சசிகலா, முதல்வர் பழனிசாமி சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காத விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.