தஞ்சை அருகே பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது வரகூர் கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியில் பேருந்து மோதியதில் மின்சாரம் தாக்கி கவிதா, நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.
அத்துடன் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணமும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தஞ்சை வரகூரில் பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை எம்.பி. வைத்தியலிங்கம் வழங்கியுள்ளார்.