அதிமுக வேட்பாளர் சந்திரசேகரின் ஜேசிபி ஓட்டுநரின் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்..!!

மணப்பாறை அ.தி.மு.க வேட்பாளரும் எம்எல்ஏவுமான ஆர்.சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றுபவரின் வீட்டு அருகே உள்ள வைக்கோல்போரில் இருந்து கத்தை கத்தையாக 500 ரூபாய் நோட்டுகளாக 1 கோடி ரூபாய் பணத்தை நள்ளிரவில் நடைபெற்ற சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர்.

இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநர்களாக பணியாற்றும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, கோட்டைப்பட்டியை சேர்ந்த ஆனந்த என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

எம்எல்ஏ தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தங்கபாண்டியன் என்பவரது வீட்டிலும், வீரகோவில்பட்டியில் எம்எல்ஏவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரின் கல்குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 3 இடங்களில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டிற்கு நள்ளிரவு சென்ற வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல்போரிலிருந்து 500 ரூபாய் கட்டுகளாக சுமார் 1 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே