சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில், நேற்று, முதல் பிறை தெரிந்ததால், இன்று(மே 24) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புனித ரமலான் மாதத்தின் இறுதி நாளான நேற்று, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில், முதல் பிறை தெரிந்தது.
இதையடுத்து, இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்காசிய நாடுகளான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், லிபியா, சிரியா, ஜோர்டான், ஜெருசலம், லெபனான் ஆகியவற்றில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சவுதியில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தையொட்டி, ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
எனினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் வழக்கமாக நடைபெறும் தொழுகைக்கு, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளன.
மக்கள் வீடுகளில் தொழுகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
புவியியல் அமைப்பின்படி, இந்தியாவில், முதல் பிறை இன்று தெரியும் என்பதால், நாளை, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஈரானில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடைகள், மத வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள், இன்று திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் மத வழிபாட்டு தலங்களில் சிலவற்றை, நாளை திறக்க, ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், குறுகிய தெருக்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியில்லை.
கொரோனாவால், ஈரானில், 7,359 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய மூன்று கட்டங்களை தாண்டி விட்டதால், ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக, ஈரான் அதிபர், ஹசன் ருஹானி, தெரிவித்துள்ளார்.