கட்சி பெயர், சின்னம் குறித்து ரஜினி மன்ற நிர்வாகி விளக்கம்..!!

கட்சி பெயர் மற்றும் சின்னம் குறித்து தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என, ரசிகர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், ரஜினி போட்டியிட உள்ளார். இதற்காக எப்போது கட்சி துவங்கப்படும் என்ற அறிவிப்பு டிச.,31ம் தேதி ரஜினி அறிவிக்க உள்ளார்.

இந்நிலையில், நேற்று(டிச.,14) தமிழகத்தில் எந்த கட்சிக்கு என்ன சின்னம் என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில், ‘மக்கள் சேவை கட்சி’ என்ற புதிய கட்சியின் பெயரும், அதற்கு ஆட்டோ சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இது தான் ரஜினி துவங்க உள்ள கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. 

தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டு கொள்கிறோம்.” இவ்வாறு ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே