அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நீடிக்கத் தடை விதிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருபுறம் சூரப்பாவுக்கு எதிரான புகாரில் தமிழக அரசு அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நீடிக்கக்கூடாது எனக் கூறி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்திருக்கிறது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, ஒருவர் இரண்டுமுறைக்குமேல் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்க முடியாது.

ஆனால் சூரப்பா கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை பஞ்சாப் ஐஐடி-யில் இயக்குநராக பதவி வகித்ததாகவும், தற்போது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் டீனாக பதவி வகித்ததாகவும், டிராஃபிக் ராமசாமி புகார் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் அவரது பதவியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ஐஐடியில் இயக்குநராக பதவியும் துணைவேந்தர் பதவியும் ஒரே சமமானது என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் சமர்பிக்க தவறியதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளனர்.”

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே