கொரோனா தொற்று வெகு வேகமாகப் பரவிவரும்போது ஊரடங்கை தளர்த்திய ஒரே நாடு இந்தியாதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
அத்துடன், தொற்று பரவுவது மே மாத இறுதியில் குறைந்துவிடும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக தற்போது தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இணைய தளம் மூலமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்திய ராகுல் காந்தி, தேசிய அளவிலான ஊரடங்கு, (அல்லது முடக்க நிலை) தோல்வியடைந்துவிட்டதாக கூறிய ராகுல்காந்தி, நான்கு கட்ட முடக்க நிலையால் பிரதமர் குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படவில்லை என்பதையும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார்.
“முடக்கநிலை அமலாக்கப்பட்டபோது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக மூன்று நாட்கள் மட்டுமே ஆனது. ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகின்றன.
இதுவே இந்த முடக்கநிலையின் வெற்றி,” என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியது.
தற்போது முடக்கநிலையைத் தளர்த்தும்போது அதையும் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இரட்டை நாக்கில் பேசுகிறது, என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலகமே பாராட்டும்போது, காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.