புஷ்பா’ அப்டேட்: வில்லனாக முன்னணி நட்சத்திரம் ஒப்பந்தம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்து உருவாகும் ‘புஷ்பா’ திரைப்படத்தின் வில்லனாக நடிகர் ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். ‘ரங்கஸ்தலம்’ படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடுவில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் முழு வீச்சில் நடந்து வருகிறது. செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பான கதை என்று கூறப்படும் ‘புஷ்பா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் வில்லனாக மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஃபகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஃபகத் நடிக்கும் முதல் தெலுங்குத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தத் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பார் என்று செய்திகள் வந்தன.

மைத்ரி மூவி மேக்கர்ஸின் சமீபத்திய வெளியீடான உப்பென்னாவிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அதற்குப் பெரும் வரவேற்புக் கிடைத்ததால் கண்டிப்பாக புஷ்பாவிலும் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேதிகள் இல்லாத காரணங்களால் விஜய் சேதுபதிக்கு பதில் ஃபகத் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே