ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை 28ம்தேதியும், தேரோட்டம் வரும் 29ம் தேதியும் நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ரங்கநாதர் கோயிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழா வரும் 30ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. கொடியேற்ற மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கும்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

விழாவின் 2ம் நாளான இன்று (21ம்தேதி) காலை 8 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

அங்கிருந்து இரவு 9 மணியளவில் நம்பெருமாள் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை மறுதினம் (22ம் தேதி) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தானமண்டபம் சென்றடைகிறார். அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி கண்ணாடி அறையை வந்தடைகிறார். 23ம் தேதி தங்க கருட வாகனத்திலும், 24ம் தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

வரும் 25ம் தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையும், 26ம் தேதி நம்பெருமாள் நெல்லளவும் கண்டருளுகிறார்.

27ம் தேதி இரவு 8.45 மணிக்கு வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை தாயார் சன்னதியில் நடைபெறும் நம்பெருமாள் ரங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 29ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 30ம் தேதி ஆளும் பல்லக்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம்  கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே