கொரோனா தடுப்பு ஏற்பாடுகளுடன் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை…!

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி எம்.எல்.ஏ-க்களின் இருக்கைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமைக்கப்பட்டிருந்தது பாராட்டைப் பெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.2042 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

அடுத்த மூன்று மாத செலவினங்களுக்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களின் இருக்கைகள் சமூக பரவலைத் தடுக்கும் வகையில் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டிருந்தது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், தி.மு.க பொதுச் செயலாளராக இருந்து மறைந்த அன்பழகன் மறைவு, கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து முதல்வர் நாராணயசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியதும், புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட கொரோனா குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது முதல்வர் நாராயணசாமி, இடைவெளிவிட்டு முற்றுகை போராட்டம் நடத்துங்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே