கொரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூபாய் 2000/- அவரவர் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ. 2000 வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
புதுச்சேரியில், கொரோனா குறித்து முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தில் விளக்க அறிக்கை வாசித்தார்.
அதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை புதுச்சேரி அரசு மார்ச் மாத துவக்கத்திலேயே எடுத்துவிட்டது.
இதனால் புதுச்சேரியில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
புதுச்சேரியில் கொரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்ட்டிலேட்டர்கள் தற்போது உள்ளதாகவும், படுக்கைகளும் தயாராக உள்ளதாகவும், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் நான்கும், காரைக்காலில் இரண்டும் உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் சமூகக் கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளதாகவும், மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும் எனவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.