புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ வி சுப்பிரமணியன், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் சேர்ந்த அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி, திமுக கீதா ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது.

இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பிப்ரவரி 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், இன்று (பிப்.21) பிற்பகல் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேசன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இதனால் நாராயணசாமி அரசுக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12-ஆக குறைந்துள்ளது.

இதன் காரணமாக பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தொடரும் நெருக்கடி நிலை புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே