கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தீவிரம் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் சந்தையை மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடுகளில் இயக்குவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் நேரடியாக வர தடைசெய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சில்லறை விற்பனை முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அந்தந்த பகுதிகளில் உள்ள திறந்தவெளி மைதானம் மற்றும் பேருந்து நிலையத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ மார்க்கெட் மற்றும் பழங்கள் அங்காடி வியாழன் முதல் மாதாவரம் பேருந்து நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் ஏற்றிவரும் வெளி மாநில வாகனங்கள் மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின் வெளியேற்றப்படும்.

அதிகாலை முதல் 7.30 மணி வரை வியாபாரிகள் சில்லறை விற்பனைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதானிய அங்காடிக்கும் பொருந்தும்.

தற்பொழுது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் லாரிகள் மற்றும் வீட்டு வினியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காய்கறி வினியோகமானது தொடர்ந்து நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே